முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல். அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. குணசேகர அவர்களின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இக்கைது இடம்பெற்றது.

மாவட்ட புலனாய்வு அதிகாரி ஆரூஸ் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் சேனக பண்டார தலைமையில் பொலிஸ் சார்ஜன் பண்டார (47283) மற்றும் கொஸ்தாபிள்களான பண்டார (61195), கவிராஜ் (105152) ஆகியோர் இணைந்து கைவேலி 1ஆம் வட்டாரம் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தை புலி ஒன்றை கொன்று, அதன் நான்கு கால்களையும் வீட்டுவளவில் புதைத்து, பற்களை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது. குறித்த புலிப்பற்களை ரூபாய் 110,000க்கு வாங்கிய வர்த்தகர் ஒருவரும், அதற்குத் துணைநின்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


