திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிசார் தாக்கல் செய்த  வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின்  36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 15 .09. 2023 அன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது
இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலமையில் குறித்த நிகழ்வை பல்வேறு காரணங்களை காட்டி தடை செய்வதற்காக பொலிசார் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும்  பல்வேறு நீதிமன்றங்கள்  தடை செய்ய மறுத்து வருகின்றன
இவ்வாறான பின்னணியில் கடந்த 19.09.2023 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகள் ஊடாக குறித்த ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த பொலிசார் அன்றைய தினத்தில் குறித்த நான்கு பொலிஸ் தினத்தில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது
அதன் அடிப்படையில் புதுக்குடியிருப்பு , முல்லைத்தீவு முள்ளியவளை ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிசார் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரிய  வழக்கை  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்திருந்தார்
இதே வேளையிலே ஒட்டுசுட்டான் பொலிசார்  நினைவேந்தல் நிகழ்விற்கு தடை கோரிய வழக்கை கொண்டு வந்த போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் அவர்கள் குறித்த வழக்கையும் தள்ளுபடி செய்திருந்தார்
இவ்வாறான பின்னணியில் இன்றையதினம் மல்லாவி மற்றும் மாங்குளம் பகுதிகளுக்கு குறித்த ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த பொலிசார் நேற்றைய தினம்(22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு பொலிஸ் பிரதேசங்களிலும்  குறித்த நினைவேந்தலுக்கு தடை கோரி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  பதில் நீதிபதி த.பரஞ்சோதி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்  சட்டத்தரணிகள் பலரும் இந்த விடயத்திற்கு  வாதிட்டு இருந்தனர் இதன் அடிப்படையில் பொலிசாரால் கொண்டுவரப்பட்ட குறித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து பொலிசாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த தடையுத்தரவுகள்  வழங்கப்படாமல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டதோடு மக்கள் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்க முடிந்தது

Latest news

Related news