ஒதியமலையில் மக்கள்குறைகேள் சந்திப்பு; வனஇலாகா அபகரித்துள்ள வயல்காணிகள், பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

.முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக்கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை இன்றையதினம் (13) நடாத்தியுள்ளார்.

இதன்போது வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள, கருவேப்ப முறிப்புக் குளத்தின் கீழான மக்களின் வயல்நிலங்களையும், இவ்வாறு வனவளத் திணைக்களம் வயல் நிலங்களை அபகரித்துள்ளதால் பாரிய நிதிச்செலவில் சீரமைக்கப்பட்டும், பயன்பாடில்லாமல் காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் விவசாய வீதிகளைச் சீரமைத்தல், விவசாயக் கிணறுகளைச் சீரமைத்தல், குளங்களின் சீரமைப்பு, வாய்க்கால் சீரமைப்பு, கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல், யானைவேலி அமைத்தல், அணைக்கட்டுக்கள் அமைத்தல்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது ஒதியமலைக் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை இதன்போது ஒதியமலைப்ப பகுதியில் அமைந்துள்ள கருவேப்ப முறிப்புக்குளத்தின் கீழான வயல்நிலங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பாரிய நிதிச் செலவில் சீரமைக்கப்பட்ட கருவேப்பமுறிப்புக்குளம் பயன்பாடின்றிக் காணப்படுகின்றது. எனவே குறித்த விவசாயக்காணிகளை விடுவிப்பு செய்துதருமாறும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி ஒதியமலைக் கிராம மக்கள்பலர் இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுவதுடன், தற்போதும் ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட கிராம மக்களுக்கு டிசம்பர் 02ஆந்திகதியில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படுகொலைச் சம்பவத்திற்கு பிற்பாடு அங்கிருந்த தமிழ் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துடன், நீண்டகாலத்திற்கு பின்னரே தமது பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்தமையினால் அவர்கள் இடம்பெயர்விற்கு முன் விவசாயம் மேற்கொண்ட காணிகள் அனைத்தும் தற்போது பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கின்றன.

இந் நிலையில் இவ்வாறு பற்றைக் காடுகளாகக் காணப்படும் மக்களின் விவசாயக் காணிகளை வனவளத் திணைக்களம் தமது பகுதிகள் என தற்போது அபகரித்துள்ளது.

குறிப்பாக கருவேப்பமுறிப்பு குளத்தின் கீழான சுமார் 110ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களின் வயல் காணிகள் இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கருவேப்பமுறிப்புக்குளம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் பாரிய நிதிச்செலவில் சீரமைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு தயாரான நிலையில் காணப்படுகின்றபோதிலும், குளத்தின் கீழான மக்களின் வயல் நிலங்கள் வனவளத் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் தமது விவசாயநிலங்ளை துப்பரவுசெய்து விவசாயம் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைய கருவேப்ப முறிப்புக்குளத்தையும், வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

மேலும் இதன்போது மக்களிடம் மகஜர்களையும் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் , மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து தம்மால் கவனஞ்செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Latest news

Related news