புதுக்குடியிருப்பில் சிறப்பான முறையில் குருந்தூர் அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா நேற்றையதினம் (30.01.2025) இரவு இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் கடந்த மாதம்(28.12.2024) இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 6 அணிகள் குறித்த ஏலத்தில் பங்கேற்றிருந்தன. அதில் ஒன்றான குருந்தூர் அணியினருக்கான சீருடை அறிமுகவிழா நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு Sfc தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வி.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் போட்டி ஒருங்கிணைப்பு தலைவர் இ. சுமன், குருந்தூர் அணியின் உரிமையாளர் இ.கவாஸ்கர், முகாமையாளர் பா.சதீசன், உட்பட அணி வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறந்த மற்றும் திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் அவர்கள் பிரபலமடைய வழிவகுப்பதனை முதன்மையான இலட்சியமாக கொண்ட இப் போட்டி மாவட்டளவில் முதன்முறையாக நடைபெறும் பிரமாண்டமான முன்னெடுப்பாகும்.
அத்தோடு முல்லை பிரீமியர் லீக் (MPL) போட்டிகள் நாளையதினம் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி மிகச் சிறப்பாக மாமூலை சுதன் சுதனா விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இதன் இறுதி போட்டியானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்திலும் இடம்பெறவுள்ளது. கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெறவுள்ளது.