சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான மகஜர் ஒன்று இன்றைய தினம் (20.06.2025) முல்லைத்தீவு மீனவர் சமூகத்தினரால் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான மகஜரினை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் கையளித்தனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக தொழில் செய்பவர்களின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்றையதினமும் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயமாகி இருந்த நிலையில் அவர் மயாமாகியது தொர்பில்பல சந்தேகங்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்த நிலையில் சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான மகஜரினை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமூகத்தினரால் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த மகஜரில் மேற்படி எமது கடல் தொழிலாளர் சமுதாயம் கடலில் தொடர்ந்தும் சட்டவிரோத தொழிலாளர்களினால் அச்சுறுத்தபட்டும் எமது தொழில் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் இறுதியாக நேற்றையதினம் உயிர் பாதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளோம் .
எமது இவ் அவல நிலையினை பல தடவைகள் பல வடிவங்களில் அரசுக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறைகளுக்கும் மற்றும் திணைக்களங்களுக்கும் தெரிவித்தும் இதுவரை எதுவித முன்னேற்றமும் இன்றி இதுவரை எம் சமுதாயம் இச்சட்டவிரோத தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டு வரேவது மிகவும் மன வேதனை அளிப்பதுடன் இதனை எம்மால் எமது சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இனிவரும் காலங்களில் எம்மை பாதுகாக்கவும் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சில முடிவுகளை நாம் தனித்து எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதனை மனவேதனையுடன் தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வதுடன் தாங்கள் எமது அவல நிலையை கருத்தில் கொண்டு எமது பாதிப்பிலிருந்து மீள ஆவண செய்து தருமாறு மிகப் பணிவன்புடன் பாதிக்கப்பட்ட நாம் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் குறித்த மகஜரினை பெற்று குறித்த மகஜரினை அரசாங்க அதிபரிடம் கையளித்து குறித்த விடயங்களை கூறுவதாகவும் நாளையதினம் காலை அரசாங்க அதிபரை சந்தித்து இதற்குரிய முடிவினை கலந்துரையாடி பெறுவதற்கு மீனவ சமூகத்தினரை வருகைதருமாறும் கூறியிருந்தார்.
நேற்றையதினம் (19.06.2025) கடற்தொழிலுக்கு மீனவர்கள் சென்ற வேளை படகு ஒன்று நடுகடலில் தனியாக இருந்துள்ளது. அருகில் சென்றுபார்த்தவேளை மீனவர் உடுத்தியிருந்த சறமும் படகில் இரத்த கறையும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை மீனவ சமூகங்கள் இணைந்து நேற்றைய தினமும், இன்றும் தேடுதல் நடாத்தியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மாறாக மீனவர் பயன்படுத்திய ஒரு தொகுதி வலைகள் கிடைத்துள்ளது.
அதனையடுத்து தடயவியல் பொலிசார் இன்றையதினம் படகில் காணப்பட்ட இரத்தகறையினை. பரிசோதித்து மனித இரத்தம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக கடலில் மாயமாகிய குறித்த நபரின் சகோதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.