நடவடிக்கை எடுக்க தவறின் ஜனநாயக ரீதியாக போராட்டம் தொடரும்
கரைதுறைப்பற்று பிரதேசசபையில் சபை அமர்வில் சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக சபை உறுப்பினர் நடந்து கொண்டதனை கண்டித்து சபை உறுப்பினர்களால் மகஜர் ஒன்று இன்றையதினம் (07.01.2026) பிற்பகல் சபை தவிசாளர், உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில் சபை உறுப்பினர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதோடு
அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார். தவிசாளர் கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்துள்ளது இதனை கண்டித்து பிரதேசசபை உறுப்பினர்கள் மகஜர் ஒன்றினை சபை தவிசாளர், உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளித்துள்ளனர்.

கையளிக்கப்பட்ட மகஜரில்

மேற்படி விடயம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளான உயரிய சபையின் உறுப்பினர்கள் ஆகிய நாம் தங்களின் மேலான கவனத்துக்கும் உரிய கௌரவ நடவடிக்கைக்குமாக கொண்டு வரும் விடயம் யாதெனில் கடந்த 31.12.2025 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் நடைபெற்றமை யாவும் தாங்கள் சபையின் தலைமை அதிகாரியாக நேரடியாக பார்த்து அவதானித்தவை என்பதை தாங்களும் உணர்வீர்கள் நாங்களும் அறிவோம்.
சபை அமர்வுகளில் வாத பிரதிவாதங்கள் வருவது வழமையும் தேவையானதுமே. ஆனால் அதன் முடிவு வன்முறை அல்ல மக்களுக்கு ஆரோக்கியமான சேவையாகவே அமைய வேண்டும் இதற்காகவே மக்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள் இருந்த போதும் அன்றைய கூட்டத்தில் கௌரவ உறுப்பினர் சயான் அவர்கள் எம்மோடு வன்முறையாக நடந்து கொண்டார். அதாவது அநாகரிகமான முறையில் மேசைக்கு மேலாக பாய்ந்து கண்ணாடி குவளையை உடைத்து தாக்க முற்பட்டமை மட்டுமல்லாது சபைக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை (மக்களின் சொத்துக்கள்) வேண்டுமென்றே சேதப்படுத்தியிருந்தார். இதனை தாங்கள் நேரடியாக பார்த்துக்கொண்டே இருந்தீர்களே தவிர இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சபையை கட்டுப்படுத்துமாறும் உரிய கௌரவத்தை பேண விரைந்து கட்டளையோ நடவடிக்கையோ மேற்கொள்ளுமாறு கௌரவ உறுப்பினர் குணசிங்கராசா அவர்களால் கூறப்பட்டது அதற்குத் தாங்கள் அமைதி காத்ததன் காரணம் என்ன? என்.பி.பி கட்சிக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களைக் காப்பாற்ற முயல்வது சரியானதா? இதுதான் தங்கள் ஜனநாயகமா?, இவை தொடர்பாக உறுப்பினர்களுக்கு கூறிய பதிலென்ன? சபையின் மீது அதி திருப்தியிலுள்ள மக்களுக்கு பொதுவெளியில் கூறப்போகும் பதில்கள் என்ன?
இந்த நிலைமையில் 20.01.2026 திகதி கூட்டம் நடாத்த இருப்பதாக அறிய முடிகின்றது நாங்கள் சபை அமர்வில் கலந்து கொள்வதாயில் எங்களுக்கான பாதுகாப்புக்கு யார் பொறுப்பு. மீண்டும் வன்முறை ஏற்படாது என்பதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் எவை? அல்லது மீண்டும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதா? நல்லதோ கெட்டதோ சபையை வழிநடத்துகின்ற பொறுப்பு தங்களிடம் காணப்படுவதனால் இதற்கு சரியான பதில் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என கூறப்பட்டிருந்ததுடன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினை சேர்ந்த உறுப்பினர்களுமாக 10 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்டு மகஜரினை வழங்கியிருந்தார்கள்.
பிரதி:-
01)பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு (தகவலுக்காவும் அரச சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலுக்காகவும்)
02)செயலாளர் கரைதுறைப்பற்று பிரதேச சபை ( ஆவணத்திற்காகவும் தொடர் சாட்சிக்காகவும்)
03) பொலிஸ் பொறுப்பதிகாரி முல்லைத்தீவு (சபையினதும் உறுப்பினர்களதும் பாதுகாப்பிற்குமாக)
மகஜர் கையளிப்பின் பின்னர் உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ,

கரைதுறைப்பற்று பிரதேசசபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில் சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக அநாகரிகமான சபை உறுப்பினர் நடந்து கொண்டுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார். இது தொடர்பாக அன்றைய கூட்டத்திலே தவிசாளர் அவருடைய அதிகாரத்தினை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்துள்ளது.
சபையிலே ஜனநாயகத்துக்கு முரணான முறையில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க கோரி தவிசாளருக்கு சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மகஜரினை கையளித்துள்ளோம். அதன் பிரதியினை உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கும் சமர்பித்திருக்கின்றோம். இதுதொடர்பாக தவிசாளர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியாக எம் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தார்கள்.


