குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணிகளை பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்பு கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், தள்ளி அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
அத்தோடு நீண்ட தூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களை பொலிசார் எச்சரித்துமிருந்தனர்.
இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு பெருத்த அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கடந்த செப்ரெம்பர் (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர், இந்த விடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது