முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றையதினம் (10.10.2024 ) மாலை குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

குமுழமுனை கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற ”குமுழமுனை சுப்பர் லீக் போட்டியில் ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன.அவையாவன அரியாத்தை அணி, குருந்தூர் அணி, நித்தகை அணி, மணலாறு அணி, பண்டாரவன்னியன் அணி முதலிய அணிகளாகும்.

இதில் குருந்தூர் மற்றும் பண்டாரவன்னியன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி மோதியிருந்தன. இறுதிப் போட்டியில் குருந்தூர் அணி தண்ட உதைமூலம் 3.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்ததை கைப்பற்றியது.

முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற அணிக்களுக்கு பெறுமதியான வெற்றி கேடயங்களும் ,தொடர் ஆட்டநாயகனாக வி.திலக்சன், ஆட்டநாயகனாக க.சுதாலதன், சிறந்த கோல் காப்பாளராக தெ.சதுர்சனனுக்கும் வெற்றி கேடயங்களும், அணிகறுகளுக்கான உரிமையாளர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் இடம்பெற குமுழமுனை வாழ் புலம்பெயர்ந்த உறவுகள் முதன்மையான நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.

அந்தவகையில் பண்டாரவன்னியன் அணியினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் சாந்தகுமார் கலைச்செல்வி, மணலாறு அணியினை நோர்வே நாட்டில் வசிக்கு இராசையா உதயகுமார் , அரியாத்தை அணியினை ஜேர்மன் நாட்டில் வசிக்கும் கனகையா ஸ்ரீகாந்தன் ,
நித்தகை அணியினை குமுழமுனை வாழ் சிரேஸ்ட பொறியியலாளர் தில்லையம்பலம் கெங்காரதன் ,குருந்தூர் அணியினை கனடாவில் வசிக்கும் தங்கராசா உருத்திரமூர்த்தி நிதி அனுசரணை வழங்கி அணியின் உரிமையாளராக நிலை நிறுத்தியுள்ளனர்.

ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் க.சுதாலதன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில் குமுழமுனை மத்தி கிராம அலுவலகர் சுஜினோ, கிராம அபிவிருத்தி சங்கத்தினர், ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் , ஊர்வாழ் உறவுகள் , அயல்கிராம மக்கள் , பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











































































