முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் இருபடகுகளும் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
களப்புக்கள், பெரும் கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்களை தொடர்ச்சியாக கடற்படையினரின் உதவியுடன் நீர்வள திணைக்களம் , மீனவ சங்கங்கள், மக்களின் ஒத்துழைப்புடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் (09.04.2025) அதிகாலை கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 8.5 கண் குறுக்கிட்டு வலையுடைய படகு ஒன்றும், மீன் ஏற்றும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது. அத்தோடு ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மோகனகுமார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினமும் இரு படகுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்தோடு நேற்றையதினம் ஒரு படகுடன், இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள களப்புக்கள், கடற்பரப்பை நம்பியே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே களப்புக்கள், கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியிலே குறித்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.