தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,
வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், மாவட்ட கூட்டுறவு மீனவ சமாசம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.04.2025) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடி போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிள் சட்டவிரோத தொழிலை செய்யும் விசமிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டதுடன் அவருக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து
இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகள் இனியும் இடம்பெற கூடாது, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட பிரச்சினைக்கு நீதிகிடைக்க வேண்டும் , குறித்த செயற்பாட்டில் பொலிஸாரின் அசமந்த போக்கு மற்றும் குறித்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் போன்றவாறான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மீன்பிடி அமைச்சரே அனைத்து வழிகளும் பாதிக்கப்படுகின்ற எம்மை திரும்பிப்பாருங்கள்!, சட்டவிரோதிகள் வளர அவர்களுக்கு தீனி கொடுப்பவர்களே காரணம்!, எம்மை அச்சுறுத்தும் விசமிகளை உடனடியாக கைதுசெய்! ,அரசே சட்டவிரோத மீன்பிடி தாெழிலை கட்டுப்படுத்தி நீரியல் வளங்களை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்து, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வாழவிடு வாழ விடு சிறுமீனவர்களை வாழவிடு, ஒழிக ஒழிக சட்டவிரோதிகளின் அராஜகம் ஒழிக போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தின் பின்னர் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரிடம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் பிரான்சிஸ், செயலாளர்
Mm .ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பிரதாஸ், மற்றும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற்குரூஸ், கரைச்சி பிரதேச சமாச உபதலைவர் ரவி,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் மீனவ சங்கங்கள், நலன்விருப்பிகள், தென்றல் பெண்கள் அமைப்பினர்,விழுதுகள் இளைஞர் கட்டமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.