முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சின்னராசா லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து இன்றையதினம் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், உபதபிசாளரின் அதிகாரம் என்ன என்பது தெரியாத ஒருவரை தபிசாளராக நியமித்தது கட்சியின் மிகப் பெரிய தவறாகும். இதனை நினைத்து வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளேன்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சபையில் பிரேரணையை முன் வைக்கும் போது தபிசாளர் எதுவும் கூறாமல் சபையை விட்டு வெளியேறியிருப்பது அநாகரிகமான செயற்பாடு. அவ்வாறு செல்லும் முன் உபதபிசாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் உபதபிசாளருக்கு வழங்காமல் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கிறார். இது தலைமை பண்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் ஊடகவியலாளரை செய்தி சேகரிப்பதற்காக உள்ளே அனுமதிக்க பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகின்றார். ஊடகவியலாளர் என்னும் அடையாளமாயின் ஊடக அடையாள அட்டையே. அவ்வாறு ஊடக அடையாள அட்டை வைத்திருப்பின் அவர்களே ஊடகவியலாளர்கள். தபிசாளர் ஊடகங்களை உள்ளே அனுமதிப்பதற்கு அச்சப்படுவதால் மட்டுமே இத்தகைய கட்டளைகளை பிறப்பிக்கின்றார். கரைதுறைப்பற்று பிரதேச சபை தற்போது தபிசாளரின் தன்னிச்சை முடிவுகளின் கீழ் இயங்கிவருகிறது. எனக் குறிப்பிட்டார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்களும் , சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


