அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல்முடியாமல் அவதியுறும் விவசாயிகள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000வரையிலான நெல் மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாமல் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் நீண்டநாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புநிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியள்ள பாதிப்பு நிலமைகளைச் சீர்செய்வதற்கு தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதியினைச் சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமமான தென்னமரவடி பகுதியைச்சேர்ந்த விவசாயிகளும் சுமார் 2000ஏக்கர்இற்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் அக்கரைவெளி விவசாயநிலப் பகுதிக்குச்செல்லும் வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடைசெய்யப்படும் பெரும்போக நெல்லினை அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக 800ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் அறுவடைமேற்கொள்ளப்பட்ட 5000வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாத நிலையில் வீதியோருங்களிலும், வயல்வெளிகளிலும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இவ்வாறு எடுத்துச்செல்ல முடியாதநிலையில் 15நாட்கள்வரையில் அங்கு நெல்மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்மூட்டைகள் மூழ்கிப்பாதிப்படைந்துள்ளன.
இதனால் அக்கரைவெளியில் தற்போது 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனைவிட இன்னும் அறுவடைசெய்யவேண்டிய நிலையில் பலநூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரைவெளியில் காணப்படுகின்றபோதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடைசெய்வதிலும் தயக்கங்காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் முறையீட்டிற்கு அவைாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொக்கிளாய் புளியமுனைப் பகுதியிலிருந்து, கொக்கிளாய் களப்பினூடாக படகில் குறித்த அக்கரைவெளிப்பகுதிக்கு நேரடியாகச்சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டார்.
இதன்போது விவசாயிகளால் உடைப்பெடுத்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் காண்பிக்கப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து கொண்டுசெல்லமுடியாதநிலையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் காண்பித்தனர்.
அதேவேளை குறித்த விளாத்தியடி இறக்கப்பாலத்தினைத் தற்காலிகமாகச் சீர்செய்து தாம் தற்போது அறுவடைசெய்யும் நெல்லை எடுத்துச்செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
அத்தோடு நீண்டநாட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதாலும், அடுக்கிவைக்கப்பட்ட நெல்மூட்டைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததாலும் சந்தைப்படுத்தமுடியாதநிலையில் காணப்படும் தமது நெல்லிற்கு இழப்பீடுகளைப் பெற்றுத்தருவதுதொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பாதிப்பு நிலைதொடர்பில் தெரியப்படுத்தியதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலமைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதுதவிர விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைகள்தொடர்பில் உரிய தரப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலையை தீர்க்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவுந் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் வலியுறுத்தலுக்கமைய கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து அக்கரைவெளி வரைக்குமான பாதையைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அந்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news