பலத்த வெட்டு காயங்களுடன். பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரே வெட்டு காயங்களுடன் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டில் சடலமாக கிடப்பதனை அவதானித்த கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் கிளிநொச்சி தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதிவான் எஸ்.எச்.மஹ்ரூஸ் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவுகளிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மூதாட்டியிடமிருந்து நகைஉள்ளிட்ட பொருட்களை களவாடும் நோக்குடன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தை சேர்ந்த ராமசாமி ராமாயி. எனும் 70 வயதுடைய பெண் மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.