முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இன்றையதினம் (30.09.2025) வழங்கப்பட்டன.
முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ஞா.ஜூட்சனின் வேண்டுகோளையடுத்து, அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் தமிழ் வானொலியின் இயக்குநர் விஜய் இராஜகோபால் வழங்கிய நிதி உதவியின் மூலம் 10 முன்பள்ளிகளை சேர்ந்த 230 மாணவர்களுக்கு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் க.தவராசா, பிரதேச சபை உறுப்பினர் ஞா. ஜூட்சன், சமூக ஆர்வலர் இ. தயாபரன், வற்றாப்பளை மற்றும் கேப்பாபிலவு கிராம சேவையாளர்கள், பங்குத்தந்தை , முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வன்னி பிரதேசத்தில் பல்வேறு சமூக உதவித் திட்டங்களை தாயகம் தமிழ் வானொலி தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.