முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களான விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையாக்கியுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தனது கட்டளையில், குறித்த சந்தேகநபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்கு தொடுனர்தரப்பே ஏற்றுக்கொண்டதையும் விசேடமாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இன்றையதினம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் பத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகள் சந்தேகநபர்கள் சார்பாக தோன்றி வாதிட்டிருந்தார்கள்.