புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றையதினம் (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த தொழில் முயற்சியாளர்கள் 8 பேரும், முன்னோடி தொழில் முயற்சியாளர்கள் 5 பேரும் என மொத்தம் 13 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 27 பேருக்கும் ஊக்கச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது வழங்கல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கி.டென்சியா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி. குணபாலன் ,கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் (காணி) சி.ஜெயகாந், வடக்கு மாகாண தொழில் துறை பணிப்பாளர் திருமதி க. துஷ்யா , சிறப்பு விருந்தினர்களாக கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் சி. சடாச்சரன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு பயிற்சி உத்தியோகத்தர் திருமதி உ. தேவமலர், முல்லைத்தீவு விதாதா உத்தியோகத்தர் ம. தவேந்திரன், முல்லைத்தீவு கைத்தொழில் பேரவையின் தலைவர் எஸ். பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,தொழில் முயற்சியாளர்கள், சாதனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.