கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் செயற்பட்டு வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அக்கராயன் பொதுச் சுகாதார பரிசோதகர் இராசலிங்கம் விதுஷன் அவர்கள் கடந்த மாதம் (23.10.2025) குறித்த உணவகத்தை பரிசோதனை செய்தபோது, பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
அதன்படி,
தனிநபர் சுத்தம் பேணாமலும், ஏப்ரன், தொப்பி, கையுறை அணியாமலும் ஊழியர்கள் உணவை கையாள அனுமதித்தமை,
சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படக்கூடிய வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை,
செல்லுபடியான மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவு கையாண்டமை,
உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடங்களில் இலையான்கள் காணப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்கள் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து அக்கராயன் சுகாதாரப் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நேற்றையதினம் (04.11.2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் குறித்த உணவக உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதத்தையும், ரூ.100,000 பெறுமதியான சரீர பிணையையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


