புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடையார்கட்டு சமுர்த்தி வங்கி, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி வங்கிகளுடனும் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் முதலாம் இடத்தினை பெற்றுத் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில், புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கி 4ஆம் இடத்தினை பெற்றுத் தன்னுடைய வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் அனைத்து வங்கிகளுடனும் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடையார்கட்டு சமுர்த்தி வங்கி முதலாம் இடத்தினையும், புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கி 4ஆம் இடத்தினையும் பெற்றுள்ளன. இதன்மூலம் புதுக்குடியிருப்பு பிரதேச சமுர்த்தி வங்கிகள் மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த வருடத்தைப் போலவே, உடையார்கட்டு சமுர்த்தி வங்கி இந்த வருடமும் முதலாம் இடத்தினை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதேவேளை, புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு படி முன்னேறி 4ஆம் இடத்தினை பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் 17,264,468.53 ரூபா இலாபத்தினை ஈட்டி முதலாவது இடத்தினைப் பெற்ற உடையார்கட்டு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர், உதவி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள், அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டு சபை தலைவர் மற்றும் அங்கத்தவர்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும், இவர்களை வழிநடத்திய உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் தலைமையக முகாமையாளர் ஆகியோருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

மேலும், அடுத்த வருடமும் மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கி முதல் இரண்டு இடங்களைப் பெற வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
அதேபோல், முன்பு இருந்த நிலையினைவிட முன்னோக்கி நகர்ந்து சிறப்பாகச் செயலாற்றிய புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர், உதவி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.


