முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – பொலிசார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு இடம்பெற்ற கொடூர சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர், கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருந்த உடலம், இன்று (28) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், தலையில் ஏற்பட்ட கடும் தாக்கத்தின் காரணமாக வெளியேறிய அதிக இரத்தக்கசிவே உயிரிழப்பிற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது -41 ) என்பவராவார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

Related news