ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு சுகாதார பரிசோதகர்களால் சோதனை நடவடிக்கை ஒன்று நேற்றையதினம் (13.06.2025) மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நடவடிக்கையின் போது சில பலசரக்கு கடைகளில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் புழுப்பிடித்த கோதுமை மா 46kg மற்றும் வண்டு மொய்த்த பருப்பு 20kg கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் தலைமையில் முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர்களும் இணைந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கோதுமை மா விநியோகஸ்தர்கள் பொருளின் தரத்தை உறுதிப்படுத்தி விநியோகம் செய்யுமாறும் சில்லறைக்கு விற்பனை செய்பவர்கள் உணவுப்பொருளின் தரத்தை உறுதி செய்து விற்பனை செய்யுமாறும்,குறித்த மாவினை பெற்றுக்கொண்ட சில்லறை கடை உரிமையாளர்கள் மாவின் தரத்தை உறுதி செய்யுமாறும் மனிதநுகர்விற்கு பொருத்தமற்ற மாவினை கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.